25 January, 2018

ஆதிச்சநல்லூர் - கீழடி: மண் மூடிய மகத்தான நாகரிகம் - தினத் தந்தி


எனது சொந்த ஊர் திருச்செந்தூருக்கு அருகில் உள்ளது. வருடம் இரண்டு முறை என் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இறங்கி, திருச்செந்தூருக்கு காரில் செல்வோம். சில வருடங்களுக்கு முன், அவ்வாறு செல்கையில், முதுமக்கள் தாழி என்று குறிப்பிட்ட ஒரு வளைவைக் கண்டேன். பின் அதை மறந்துவிட்டேன். கீழடி பற்றிய செய்தி  வெளியான போது ஆதிச்சநல்லூர் பற்றி குறிப்பிட்டனர்.

ஆதிச்சநல்லூர் பற்றி Google Mapsல் தேடிய பொழுது, அந்த ஊர் நாங்கள் செல்லும் வழியில்தான் உள்ளது என்பதை தெரிந்து கொண்டேன். எனது அண்ணனிடம், அந்த இடத்திற்கு ஒரு முறை செல்வோம் என்று கூறினேன்.

ஆதிச்சநல்லூர் என்பது 114 ஏக்கர் மயான பூமி. இந்த ஒரு வரி போதும் பரபரப்பை ஏற்படுத்த. 

சிறிது நாட்களுக்கு முன் நடந்த புத்தக் கண்காட்சியில், இந்த புத்தகத்தை வாங்கினேன். எனது அம்மாவின் சொந்த ஊரான தேரிக்காடு பற்றியும் நூல் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் சிறுவர்களாக இருந்த பொழுது, உணவு சாப்பிடும் சமயம், என் அம்மா பல கதைகளைக் கூறுவார். வயதான முதியவர்கள் தங்களது இறுதி நாட்களில் பெரிய மண் பானைக்குள் வைக்கப்படுவர், புதையல், மாய வித்தைகள், சாபங்கள் என்று தன் ஊரில் நடந்ததாகத் தான் சிறு வயதில் கேள்விப்பட்டவைகளைக் கூறுவார். மிகவும் சுவாரசியமாக இருக்கும்.

இந்தப் புத்தகத்தைப் படிக்கும் பொழுது அவற்றை தொடர்புபடுத்த முடிகிறது. கிருஷ்ணாபுரம், கொற்கை, குலசேகரப்பட்டினம் போன்ற ஊர்களும் புத்தகத்தில் இடம் பெறுகின்றன.

Googleல் தேடிய பொழுது அலெக்சாண்டர் ரீயா எழுதிய Catalogue of the Prehistoric Antiquities from Adichanallur and Perumbair புத்தகம் கிடைத்தது. அலெக்சாண்டர் ரீயா கண்டெடுத்தவைகள் எழும்பூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடியில் உள்ள பொக்கிஷங்களை ஆராய்ந்து மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும். எகிப்தில் இருக்கும் மம்மிகளைக் கண்டு வியந்துள்ளேன். ஆதிச்சநல்லூர் அதைவிட பிரம்மாண்டமானது என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

எனது வீட்டில் உள்ள  அனைவரையும் இந்தப் புத்தகத்தைப் படிக்கும்படி கூறியுள்ளேன்.

21 January, 2018

முதல் வேட்டையும் முதல் கொலையும்! - நக்கீரன்


நக்கீரன் பத்திரிகையின் முதல் நூல் இது.

நக்கீரன் நிருபர்கள் வீரப்பனை பல மணி நேரங்கள் எடுத்த பேட்டி, நூல் வடிவமாக வெளியிடப்பட்டுள்ளது. புத்தகத்தில் சில படங்கள் மட்டும் கலர் படமாக உள்ளது. அனைத்து படங்களும் கலர் படமாக இருந்தால் நன்றாக இருக்கும். இடது கரை வரும் பக்கங்களில் வீரப்பனின் சிறிய படத்தை போட்டுள்ளதால் பக்கத்தின் விளிம்பு அதிகமாக உள்ளது. இதை தவிர்த்திருந்தால் பக்கங்கள் குறைந்திருக்கும்.

சில மாதங்களுக்கு முன் Veerappan: Chasing the Brigand என்ற புத்தகத்தை படித்தேன். இந்த புத்தகத்தை படிக்கும் பொழுது எனக்கு விருமாண்டி படம் நினைவுக்கு வருகிறது. பசுபதியின் பார்வை போல் Veerappan: Chasing the Brigandம், கமலின்  பார்வை போல் இந்த புத்தகமும் உள்ளது.

"வீரப்பன் எங்களுக்கு முதல் எதிரி என்றால் நக்கீரன்தான் அடுத்த எதிரி" என்று தேவாரம் வெளிப்படையாகவே பேட்டி கொடுத்ததுடன், காட்டுக்குள் நக்கீரன் நிருபர்களை கண்டால் சுட்டுத்தள்ளுங்கள் என்று அதிரடிப்படைக்கு வாய்மொழி உத்தரவும் போட்டிருந்தார் (பக்கம் 26).

அதிரடிப்படையால் அப்பாவி மக்களை துன்புறுத்துகின்ற இடம்தான்  ஒர்க்ஷாப். அந்த சித்ரவதைகள் சோளகர் தொட்டி என்ற புத்தகத்தில் விவரமாக எழுதப்பட்டுள்ளது.

நக்கீரன் நிருபர் சிவா அவர்கள் வீரப்பனுடன் 5 நாட்கள் தங்கியிருந்து 9 மணி நேரம் ஓடக்கூடிய அளவுக்கு வீடியோ பேட்டி எடுத்துள்ளார். இந்த பேட்டி, 1996ம் ஆண்டு ஏப்ரல் 7ந் தேதியன்று வீரப்பனுடன் நேருக்கு நேர் என்று சன் டிவியில் ஓளிபரப்பப்பட்டுள்ளது.

வீரப்பன் 13 வயதிலே துப்பாக்கியை எடுத்து 14 வயதில் பயங்கர வேட்டைக்காரனாகியுள்ளான்.

"வெறும் 11 மாசம் தான் சந்தன மரம் ஓட்டினேன். ஆனால் பேரு மட்டும் இப்படியாகிப்போச்சு. அதில என்ன வந்திருக்கும்...ஒரு கோடி ரூபாய் வந்திருக்கும் எல்லாம் ஜனங்களுக்குத்தான் கொடுத்தேன். அவ்வளவுதான் பல வருஷம் ஓட்டி, பல ஆயிரக்கணக்கான கோடிகளை சம்பாரிச்சவன் எல்லாம் சம்பாதிச்சான். ஒரு மசிருமில்லை. வேணும்னா பேரு மட்டும் கிடைச்சுது. (பக்கம் 101)

Veerappan: Chasing the Brigand என்ற புத்தகத்தில், மக்களுக்காக நிதி திரட்டியும், தான் பெரிய தொகையை கொடுத்தும், கோபிநத்தத்தில் ஒரு கோவிலை DFO சீனிவாசன் கட்டினார் என்று ஆசிரியர் புகழ்ந்துள்ளார். ஆனால், இந்த புத்தகத்தில், உண்மை வேறு விதமாக உள்ளது. ஒவ்வொரு பட்டிக்கும் சென்று ரெண்டு ஆடுகளை மிரட்டி வாங்கி, ஏலம் விட்டு அந்த பணத்தை வைத்து கோயில் கட்டியுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. வீரப்பன் பேசும் பொழுது பாதகத் துரோகிகள் என்று கூறுவது ரசிக்கும்படியாக உள்ளது.

ஆயிரம் யானையை தசரதன் கொன்றான் என்ற கதையை இதுவரை எங்கும் படித்ததில்லை. வீரப்பனின் பேட்டியின் மூலம் தெரிந்து கொண்டுள்ளேன்.